Tuesday, April 26, 2011



மாற்றத்தை ஏற்படுத்துவார்களா இந்த தமிழ் பெண்கள் 
தமிழ் சேனல்கள் ஒட்டு மொத்த உலகத் தமிழ் சமூதாயத்தையே சிரழித்து கொண்டிருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டு மெகா டிவி சிரியல்கள் பெரும்பாலான இல்லத்தரசிகளை சின்னத்திரைப் பித்து பிடித்தவர்களாக மாற்றி வருகின்றன என்ற செய்திகளை இப்போது கேட்க நேர்கின்றது.மனதில் ஒரு அமைதியின்மை இருக்கும் போது ஒரு பெண் செயற்கையான உலகில் இருக்க விரும்புகிறாள். இதனாலேயே அதிக செயற்கை தனங்கள் நிறைந்த சின்னத்திரை தொடர்கள் மூலம் ஒருவித கற்பனை உலகில் உலா வர ஆரம்பிகிறாள் .

இதற்காகவே காலத்தையும் பொன்னான நேரத்தையும் வீணாக விரயம் செய்வதோடு மட்டுமல்லாமல் நமது பண்பாட்டிற்குக் கேடு விளைவிக்கும் வகையில் சின்னத்திரை தொடர்கள் சீர்கெட்ட தொடர் கதைகளாக உருமாற்றம் காணுகின்றன.பெண்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வழியினைக் காட்டுகின்றன. பெண்களின் மனத்தில் நஞ்சைப் பாய்ச்சும் போதனையைத்தான் போதிக்கின்றது. பெரும்பாலான சின்னத்திரைத் தொடர்ககளில் பெண்களைக் கேவலப்படுத்தியும் கொச்சைப்படுத்தியும் கதாபாத்திரங்களைப் படைத்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து படைத்தும் வருகிறார்கள். பெண்களை தெய்வமாக போற்றி வந்த நாட்டில் இப்போது பெண்களைப் பேய்களாகவும் பிசாசுகளாகவும் கொடுமைக்காரியாகவும் சிங்காரித்து காட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் அநேக தனியார் தமிழ்தொலைக்காட்சிகள் இருக்கின்றன. சில தொலைகாட்சிகளை தவிர மற்ற தொலைக்காட்சிகளில் வெளிவரும் சின்னதிரைச் சிரியலகள் அனைத்தும் இதே நிலைமையைத்தான் கொண்டிருக்கின்றன. நாம் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோமானால் கதைகளில் வரும் குடும்பப் பெண்களை மிகக் கொடூரமான வக்கர எண்ணங்கள் கொண்ட கதை பெண்களாக காண்பிக்கப்படுகின்றனர்.

கதைகளில் முக்கிய கதாபாத் திரங்களை ஏற்கும் பெண்களின் நடிப்பை பார்க்கும் போது ஆடம்பரம், அலட்சியம், வரம்புக்கு மீறியப் பேச்சும், கர்வம், ஆணவம், அட்டகாசம், உறவாடிக் கெடுத்தல், சாப்பிடும் சாப்பாட்டில் விஷம் வைத்தல், உறவுக்குள் தீராதப் பகையை ஏற்படுத்துதல். நல்ல கணவன் மனைவியைப் பிரித்தல், சூதுவாது நயவஞ்சகம், துரோகம். பழி வாங்கும் பாதகச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இவற்றைப் பார்க்கின்ற நம் குடும்பப் பெண்கள் சிலர் தங்களைச் டிவியில் வரும் பாத்திரங்களாக நினைத்துக் கொண்டு குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியும் கணவன் மனைவியர்க்கிடையே பேதங்களை உண்டு பண்ணியும் ஒருவருக்கொருவர் பண்பில்லாமல் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வதையும் தற்போது பரவலாகக் காண்பது மிகவும் கவலைக்குரியது

ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்கிற எல்லைகளைப் பிடுங்கி எறிந்து விட்டு மேலைக் கலாசாரங்களில் மோகங்கொண்டு சீரழிந்து தமிழ்ப்பண்பாடுகளை கேவலப்படுத்தியும் வருகின்றனர்.

ஆகவேதான், இத்தகைய தீய எண்ணங்கள் கொண்ட சகுனிகளாகவே பெண்கள் பெரும்பாலும் அக்கதைகளில் வலம் வருகிறார்கள். மேலும் பெண்களின் மனத்தைக் கவரும் வகையில் தொடர்களைப் புனைந்திருக்கிறார்கள். மேன்மேலும் வரும் தொடர்களைப் பார்க்கும்படி ஆவலைத் தூண்டி விடுகிறார்கள். தொடர்கள் பல மாதங்களுக்குக் குழப்பமான நிலையிலே கதையின் சாராம்சம் செல்கின்றன. இதன் முடிவு எப்படியிருக்குமென சில பெண்களது மனத்தளவில் போராட்டமும் எழுகின்றது.

டிவி தொடர்கள் பெண் ரசிகர்களை மன அழுத்தத்திற்குக் கொண்டு செல்கின்றன என்பது ஒரு சிலரின் அனுபவ உண்மை.

இதில் மாற்றத்தை கொண்டு வர தாயாரிப்பாளார்கள் முயற்சி செய்வார்களா அல்லது இதைப் பார்க்கும் பெண்கள், இதைப் பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்வார்களா?

நாளைய சமூகத்திற்கு நல்ல கருத்துகளை தரக்கூடிய சிந்தனையை தூண்டக்கூடிய சின்னத்திரை தொடர்களை வெளியிட்டு நம் தமிழ் சமுதாயத்தின் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் காக்க முயற்சிக்க வேண்டும் என்று அனைவரையும் பணிவண்புடன் கேட்டூக் கொள்கிறேன்.

நான் பத்திரிக்கைகளில் படித்த செய்திகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே தமிழ் சேனலகளைப் பற்றி பேசியதன் விளைவாக என் மனதில் தோன்றியதன் விளைவே இந்த பதிவு. இதைப் பற்றி மேலும் விபரமாக நம் தமிழ் பெண் பதிவாளர்கள் எழுதி நம் தமிழ் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை. என் ஆசையை கூறிவிட்டேன். அந்த மாற்றத்தை ஏற்படுத்த பெண்கள் என்ன முயற்சி செய்ய போகிறார்கல் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்


எனது முந்தைய பதிவு:

http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_9508.html

6 comments:

  1. //அந்த மாற்றத்தை ஏற்படுத்த பெண்கள் என்ன முயற்சி செய்ய போகிறார்//

    இதையெல்லாம் பார்க்காம இருந்தாலே போதும். சீரியல்களின் தரம் எப்பவோ சாக்கடைபோல ஆகிடுச்சு. சின்னத்திரைக்கும் தணிக்கைமுறை வேண்டும். அதிலும் சீரியல்கள் மட்டுப்படுமா எனப்து சந்தேகமே.

    ReplyDelete
  2. நான் டி.வி சீரியல்கள் பார்ப்பதில்லை
    ஆனாலும்
    அழகாக இருந்தால் அவள் வில்லி
    கொஞ்சம் சுமாராக இருந்தால் கதா நாயகி
    கடைசி எபிசோட்வரை கஷ்டப்படுபவள் நல்லவள்
    கடைசி எபசோடில் மட்டும் கஷ்டப்பட்டால் அவள் வில்லி
    எனத்தான் அனைத்து சீரியல்களும் இருப்பதாக
    என் மனைவி சொல்கிறாள்
    இது மாறி எந்த சீரியலாவது வந்தால்
    என் மனைவியிடம் சொல்லச் சொல்லியிருக்கிறேன்
    இதுவரை இல்லை என்றே சொல்கிறாள்
    நானும் ஏதாவது மாறுமா என ஆவலாக உள்ளேன்
    பார்ப்போம்...

    ReplyDelete
  3. டிஆர்பி ரேட்டிங்கிற்காக வரும் சீரியல்கள் சற்றும் மாற்றிக்கொள்ளாது. ஒரு விழிப்புணர்ச்சியை இந்தப் பெண்களிடம் உருவாக்க பதிவுகள் உதவாது. பெண்களின் மன அழுத்தம்தான் இதனை ஆதரிக்கிறது. எனவே குடும்பத்தில் உள்ள மற்றவர்கள்தான் வெளிக்கொணர வேண்டும். மொட்டை மாடியில் இரவு உணவை உண்ணுதல், நகைச்சுவையாக பேசிக்கொள்ளுதல் போன்றவை உதவலாம்.

    ReplyDelete
  4. ஒரு தரமான பதிவைப் படித்த திருப்தி உண்டாகிறது.கூடவே கவலையும். நம் தமிழக தமிழினத்தை நினைக்கையில் ஆற்றாமைதான் மிஞ்சுகிறது.என்ன செய்வது..குடிகாரக் கணவன்,சீரியலில் சிக்கிக் கிடக்கும் மனைவி, சினிமா நடிகனின் பின்னால் ஓடி சீரழியும் மகன்..நெஞ்சம் பதறுகிறது.வருங்கால சந்ததி மனம் ஊனமுற்று திரியுமோ?

    ReplyDelete
  5. பெரும்பாலான சின்னத்திரைத் தொடர்ககளில் பெண்களைக் கேவலப்படுத்தியும் கொச்சைப்படுத்தியும் கதாபாத்திரங்களைப் படைத்து இருக்கிறார்கள்.//

    பெண்கள் சார்பாக ஒரு ஆண் நீங்கள் பேசுவதற்கு முதலில் என் வந்தனங்கள்..

    இந்த சீரியலையெல்லாம் தயாரிக்கும் ஆணாதிக்க சிந்தனையுள்ள தயாரிப்பார்கள் இருக்கும்வரை, அதற்கு ஒத்துழைக்கும் அப்பாவி நடிக நடிகையர் இருக்கும்வரை திருத்துவது கஷ்டமே..

    நல்ல கல்வி இதை மாற்றணும்..

    வீட்டில் குழந்தைகளை செய்தி, டிஸ்கவரி, போன்றவற்றை பார்க்க பழக்கணும்..

    பொழுது போகாமத்தானே பெண்கள் பார்க்கிறார்கள்..?.. அதை உபயோகமான வழியில் கழிக்க ஆண்கள் த்த்தம் வீட்டில் முன்வரணூம்..

    நிறைய மெசேஜ் தவறாக சொல்லப்படுகிறது வருத்தமே..

    சிறப்பான பதிவு..

    பாராட்டும்..

    ReplyDelete
  6. எனக்கு மிகவும் சந்தோஷம் இப்பொழுது. காரணம் மிக சிறந்த பதிவாளர்கள் (ஹுசைனம்மா,ரமணிசார், சாகம்பரிமேடம், லஷ்மி நாராயணன் சார் & சாந்தி மேடம்) இந்த பதிவை படித்தது மட்டுமல்லாமல் தரமான கருத்துக்களை பின்னூட்டமாக வழங்கி சென்றுள்ளனர். அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். உங்களைப் போல உள்ளவர்களின் வருகைகள் அல்லது இடும் தரமான கருத்துகள் என்னைப் போன்ற புது பதிவாளர்களை மேலும் நல்ல பதிவுகளை போட ஒரு தூண்டுகோலக உள்ளது.நன்றி...வாழ்க வளமுடன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.